Translate

Sunday 17 February 2013

விட்டலன் கதை 20

தாகம்
by J.K. Sivan

இன்று உங்களுக்கு அறிமுகம்
செய்வது ஏக்நாத் என்ற ஒரு மகான். ஒரு சிறந்த பாண்டுரங்க பக்தர். ஒருநாள் சிலருடன் சேர்ந்து யாத்திரை கிளம்பினார். அவர்கள் நடந்தே தான் அக்காலத்தில் செல்ல வேண்டும் அல்லவா? காசி அயோத்யா, பிருந்தாவன், மதுரா, பிரயாகை என்றெல்லாம் சென்றார்கள். வழி எல்லாம் பஜனை, நாமசங்கீர்த்தனம், ப்ரவசனம் செய்து தாமும் மகிழ்ந்து, அந்தந்த ஊரிலே உள்ளவர்களும் இதில் கலந்து கொண்டார்கள். ஒருவழியாக கிட்டத்தட்ட ஒரு வருஷம் போல் ஆகி, புனித யாத்திரை முடிந்து தங்கள் ஊரான பைதான் (பிரதிஷ்டானபுரம்) வந்து கொண்டிருந்தார்கள். எல்லோர் கையிலும். பூஜைக்கு, மற்றோருக்கு கொடுக்க, விசேஷ காலங்களில் உபயோகிக்க, பாத்திரங்களில் கங்கை நீர். வழியில் ஒரு இடத்தில் குடிக்கத் தண்ணீரே இல்லை. தாகம் தொண்டையை வரள செய்தது

ஏறக்குறைய பாலைவனம் அவர்கள் இருந்த இடம். ஒருசிலர் கையில் இருந்த கங்கை ஜலத்தைக் குடித்துவிட்டார்கள். ஏக்நாத் தாகத்தில் தவித்தார். அவர்கள் அருகே ஒரு கழுதையும் கீழே விழுந்து, மரணத் தருவாயில் கிடந்தது அதற்கும் தாகம். தவித்துகொண்டிருந்தது. ஏக்நாத் சற்றும் யோசிக்காமல் தன்னிடமிருந்த கொஞ்சம் கங்கை நீரை அந்தக் கழுதையின் வாயில் புகட்டினார்.
"என்ன ஏக்நாத், கங்கைநீரை ஒரு கழுதைக்குக் கொடுத்து வீணாக்கி விட்டீர்களே. புனித காரியங்களுக்கு அல்லவோ அதை உபயோகிக்க வேண்டும்" என்று கோபித்தார்கள்.
"மன்னிக்கவேண்டும். எனக்கு இந்த மரணத்தருவாயில் இருக்கும் உயிரைக் காப்பாற்ற விட்டலன் நாமத்தை சொல்லி இந்த கங்கைநீர் புகட்ட வேண்டும் என்று தோன்றியது."

சரி நாம் எல்லோரும் செல்வோம். இவரிடம் பேசிப் பயனில்லை. இவருடன் இருந்தால் இவர் செய்யும் பாபங்கள் நம்மையும் ஒட்டிக்கொள்ளும்என்று அவரை அங்கேயே கழுதையோடு விட்டு விட்டு மற்றவர்கள் சென்றுவிட்டார்கள்.
ஏக்நாத் கழுதையோடு அமர்ந்து கண்மூடி விட்டலனை த்யானித்து, அதன் உயிர் காக்க வேண்டிக் கொண்டிருந்தார்.

த்யானம் முடிந்து கண் திறந்து கழுதையைப் பார்த்தபோது, அது அங்கு இல்லை. அவரையே புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டு விட்டலனே அவர் எதிரில் உட்கார்ந்துகொண்டிருந்தான்
"பாண்டுரங்கா, எதற்கு இந்த சோதனை என்னிடம்?
"ஏக்நாத், உங்கள் பக்தி, பரோபகாரம் உலகுக்குத் தெரியவேண்டாமா" என்று சொல்லி அவருக்கு வழிப்பயணம் செல்லத்தேவையான தண்ணீர், உணவு அளித்து விட்டலன் மறைந்தான்.

இறைவன் இல்லாத இடமோ, அவனன்றி வேறு உயிரோ இல்லை என்பதை உணர்த்தவே இந்தக் கதை இன்னும் உலவிக்கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.



The writer can be reached at: jksivan@gmail.com
 

 

No comments:

Post a Comment