Translate

Saturday 23 February 2013

விட்டலன் கதை 24

பிராயச்சித்தம்
by J.K. Sivan
கோரா பற்றற்ற துறவியாக மனைவி விட்டலனின் மேல் வைத்த ஆணைக்குக் கட்டுப்பட்டு அவள் விரல் நுனி கூட தன் மீது படாது ஒரே வீட்டில் வாழ்ந்த நிலையில் அவருக்கு அவர் மனைவி சாந்தி, தன் தங்கை காமியையும் கல்யாணம் செய்து வைத்து, இருவரையும் "ஒன்றாகவே நடத்துங்கள் என்று அவள் தந்தை வேண்ட, வாக்குக் கொடுத்த கோரா, காமியையும், சாந்தி போலவே பாவித்து அவள் தன்னைத் தொடாமல் பார்த்துக்கொண்டார்!

தலைவலி போய் திரும்பி திருகுவலியாக வந்த நிலையில் காமியும், சாந்தியும் பலநாள் யோசித்து ஒருநாள் இரவு கோரா தூங்கிக் கொண்டிருக்கும்போது ஆளுக்கொரு பக்கமாக அவர் அருகில் படுத்து அவர் இரு கைகளையும் எடுத்து ஆளுக்கு ஒன்றாக தம் மீது போட்டுக்கொண்டனர். தூக்கம் விழித்து எழுந்த கோராவுக்கு தூக்கி வாரிப் போட்டது. தன் கைகள் அவர்கள் இருவரையும் தொட்டது கண்டு துடித்துப் போனார். விட்டலின் மேல் இட்ட ஆணையை மீறுவது என்பது விட்டலனையே அவமதித்தது போல் அல்லவா ஆகிவிடும். மீறியாகிவிட்டதே. இப்போது. என்ன தண்டனை இந்த அபராதத்துக்கு? முடிவெடுத்து விட்டார் கோரா.

ஆணை மீறிய தன்னுடைய அந்த இரு கைகள் இனி இருக்கக் கூடாது. வீட்டின் உள்ளே சென்று தேடினார். ஒரு கூரான கத்தி கண்ணில் பட்டது. விட்டலனை மனதில் நினைத்தார். கண்களில் நீர் ஆறாகப் பெருக, கண் இமைக்கும் நேரத்தில் இரு கைகளும் துண்டாயின. சகோதரிகள் அழுது தீர்த்தனர். தம்முடைய முட்டாள் தனத்தால் அவர் கைகள் இழக்கக் காரணமாகிவிட்டோமே என்று அவர் காலருகில் விழுந்து தம்மை மன்னிக்க வேண்டினார்கள்.

"அவன் மேல் இட்ட ஆணை மீறப்பட்டதால் விட்டலன் தானே மன்னிக்க வேண்டும் வாருங்கள் அவனிடம் செல்வோம்!" பண்டரிபுரம் சென்று விட்டலனிடம் மன்னிப்புக் கேட்க மூவரும் சென்றனர். அன்று ஆடி ஏகாதசி ஆகையால் எண்ணற்ற பாண்டுரங்க பக்தர்கள் குழுமியிருந்தனர் பண்டரிபுரத்தில். சந்திரபாகா நதியில் நீராடி அவர்கள் பாண்டுரங்கன் சந்நிதியில் நின்றபோது தெய்வீகமான ஒரு குரல் அபங்கங்களைப் பாடிக்கொண்டிருந்தது. ஆம். நாமதேவர் தான் தம்மை மறந்தநிலையில் பாண்டுரங்கனோடு இசையில் ஒன்றியிருந்தார். அருகில் ஞானேஸ்வர், நிவ்ரித்தி நாதர், முக்தாபாய் போன்ற பரம பக்தர்களும் விட்டலன் பஜனையில் கலந்து பேரானந்தத்தில் மூழ்கியிருந்தனர்.

அபங்கங்கள் விட்டல் பஜனையில் பாடும்போது பாகவதர்கள், ரசிகர்கள், பக்தர்கள் அனைவரும் சேர்ந்தும் பாடவேண்டும். பஜனைக்கு தக்கவாறு ஆடுவதும், தலையசைப்பதும், கைகளைத் தட்டுவதும் வழக்கம். அன்றும் அப்படியே அனைத்து பக்தர்களும் நாமதேவர் "கை தட்டி அனைவரும் பாடுங்கள்" என்று கேட்டுக்கொண்டபோது அவ்வாறே கர ஒலி எங்கும் வியாபிக்க, கோரா தன்னை மறந்த நிலையில் தன் கைகள் இல்லை என்ற நினைவே இல்லாமால் கைகளைத் தட்டிப் பாட முயற்சித்தபோது. அவர் கைகளிலிருந்தும் ஒலி எழுந்ததே! என்ன ஆச்சர்யம்! இழந்த கைகளை விட்டலன் திரும்ப இணைத்து விட்டானே!

விட்டலா,விட்டலா என்னே உன் மகிமைஎன்று எல்லோரும் வியந்து போற்றினர். கண்ணெதிரே ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறதே! வெட்டுண்ட இரு கைகளுடன் வந்த கோரா எப்பேர்ப்பட்ட பாண்டுரங்க பக்தர் என்று உணர்ந்தனர். நாமதேவர் அவர் காலடியில் விழுந்தார்.

சாந்தி கதறினாள்."விட்டலா உன் பெருமை தெரியாமல் உன்னை ஏசி விட்டேனே. என் குழந்தை இறந்த துக்கத்தில் அறிவின்றி உன்னைப் பழித்ததை மன்னித்து விடு. எனக்கருள் செய்." “எனக்கு குழந்தை இல்லையே என்ற துக்கம் அவ்வாறு செய்யத் தூண்டியது" எனக் கதறினாள்

"அம்மா!" என்று அவள் இடுப்பருகில் ஒரு சிறு குரல் கேட்டதும் திடுக்கிட்டாள். சிரிப்பால் அவளை மயக்கியவாறே அவர்கள் குழந்தை அவள் இடுப்பைப் பிடித்துக்கொண்டு நின்றது. விட்டலா! விட்டலா! என்ற பக்தர்கள் குரல் வானைப் பிளக்க, ருக்மணி, சாந்தியிடம் "உன் ஆணை இனி செல்லாது. எனவே நீங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து கோராவுக்கு பணிவிடை செய்யுங்கள்" என்று சாந்தி, காமியை வாழ்த்தி அருளினாள்

பண்டரிபுரத்தில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் தெர்தொகி என்கிற ஊரில் கோராவின் சமாதி இன்றும் உள்ளது. அது அவர் வாழ்ந்த கிராமம். அங்கு குழந்தை மிதிபட்ட இடம் காட்டப்பட்டுள்ளது.




                                               The writer can be reached at: jksivan@gmail.com
 

No comments:

Post a Comment