Translate

Tuesday 19 February 2013

விட்டலன் கதை 21

குரு அருள்
by J.K. Sivan
Sant Vijaya Dasa
தேனினும் இனிய எத்தனையோ சாஹித்யங்களை நமக்கு வழங்கிய மகான் கர்நாடகாவில் தோன்றிய புரந்தர தாசர். அவருடைய சிஷ்யர்களில் ஒருவர் விஜய தாசர். பரம ஏழை குடும்பம். கூட பிறந்த 8 தம்பி தங்கைகள், மற்றும் வயதான அப்பா அம்மா இத்தனை பேரையும் காப்பாற்ற வேண்டிய கடமை வேறு அவரை அழுத்திக்கொண்டே இருந்தது. இத்தனை பெரிய குடும்பத்துக்கு அவர் வருமானம் போதவில்லையே! அவருக்கு படிப்பு வாசனை இல்லாததால், பாத்திரம் கழுவி, துணி தோய்த்து, வீடு பெருக்கி, இப்படி பல வீட்டில் வேலைகள் செய்து தான் பிழைப்பு. யார் என்ன பணம் கொடுத்தாலும் அதை திருப்தியோடு பெற்றுக்கொண்டு மனம் கோணாமல் வேலை செய்வார். யாராவது உணவு கொடுத்தால் அதை வீட்டுக்குக் கொண்டுவந்து தாய் தந்தை, சகோதர சகோதரிக்கெல்லாம் கொடுப்பார். எல்லோரும் சாப்பிட்டபிறகு ஏதேனும் மீதி மிச்சம் இருந்தால் தான் அவருக்கு உணவு அன்றைக்கு.
அந்த ஊர் ஜமீன்தார் ராகவ ராவ் மகளுக்குக் கல்யாணம். அந்தக் காலத்தில் கல்யாணம் 7 அல்லது 8 நாள் நடக்கும்..

"அம்மா, நான் ஜமீன்தார் வீட்டுக் கல்யாணம் போகட்டுமா நல்ல சாப்பாடு கிடைக்கும்." என்று தாயிடம் கேட்டார் விஜயதாசர். "தாராளமாகப் போய் வா".

நடந்தே கல்யாண வீட்டுக்குப் போனார், விருந்து ஆரம்பித்து விட்டிருந்தது. சாப்பிட உட்கார்ந்தவரை "யாரையா நீ, இப்போது மாப்பிள்ளை வீட்டார் சாப்பிடப்போகிறார்கள். எழுந்திரு" என்றார்கள். எழுந்து போய் ஒரு மூலையில் நின்றார்

ஒருவர் "ஏய், இங்கே எதுக்கு நிக்கிறே, ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்து ரொப்பு. சாப்பிட்டபின் கை கழுவ நிறைய தண்ணீர் வேண்டும்" என்று உத்தரவிட்டதால் சந்தோஷமாக தூரத்திலிருந்த கிணற்றுக்கு சென்று ஒரு பெரிய பாத்திரம் நிறைய தூக்க முடியாமல் தூக்கிண்டு வந்து பெரிய தொட்டி ஒன்று நிரம்பியது. இதற்குள் 4 அல்லது 5 பந்தி முடிந்துவிட்டது. யாரும் சாப்பிடசொல்லவில்லை. உள்ளே சென்று பார்த்தார் சாப்பாடு காலியாகி பாத்திரங்கள் கூட தேய்க்கப் போட்டாகிவிட்டது. கடின வேலையால் உண்டான களைப்பும் பசியும் அவரை வாட்ட ஒரு மூலையில் துண்டை விரித்துப் படுத்தார். அவர் படுக்க செலக்ட் பண்ணின இடம் ஜமீன்தார் வழக்கமாக கட்டிலைப் போட்டு ஓய்வெடுக்கும் இடம். ஆகவே ஆட்கள் அவரை அங்கிருந்து விரட்டினார்கள்.

விட்டலா, என் அதிர்ஷ்டத்தைப் பார்த்தாயா.! ஏழு எட்டுநாள் சாப்பிடலாமே என்று ஆசைப் பட்டேனே. ஆயிரக்கணக்கான பேர்கள் சாப்பிடும் இடத்தில் ஒருவேளை சாப்பாடு கூட எனக்கு கிட்டவில்லையே ! இது என் கர்ம வினையன்றி வேறென்ன? என் கர்மம் தொலைய நான் காசி சென்றால் தான் விடிவு" என்று கர்நாடகாவிலிருந்து காசி நோக்கி நடந்தார். பகலெல்லாம் நடை. இரவு எங்காவது திண்ணை, மரத்தடி என்று படுக்கை. யாராவது தர்மவான் கொடுத்தால் உணவு; இல்லையேல் நீரும் காற்றும் தான் ஆகாரம்.

இந்த நீண்ட பயணம் ஒரு பாடம் புகட்டியது. யார் நிந்தனை செய்தாலும் யார் உதவினாலும் ஏச்சு பேச்சு எல்லாம் சமமாகவே கொள்ளும் பொறுமை வந்தது. காசிக்கு வந்தார் கங்கையில் மூழ்கினார். மனமெல்லாம் அமைதியானது. ஒரு மரத்தடியில் அமர்ந்தார், களைத்துப் போய் தூங்கிவிட்டார். அருகில் யாரோ நிற்பது போல் உணர்ந்து, பார்த்தால் கையில் தம்பூருடன் புரந்தரதாசர்!

"நாக்கை நீட்டு"! நீட்டின நாக்கில் "விட்டலா" என்று எழுதப்பட்டது. இந்த கனவு நிகழ்ந்தபோது புரந்தர தாசர் கிடையாது. அவர் மறைந்து எண்பது தொண்ணூறு வருஷமாகி இருந்தது! கனவில் விட்டலன் தோன்றினான். புரந்தரதாசர் தோன்றினார் அவரே நாரதன் மாதிரியும் காட்சிஅளித்தார். தூக்கி வாரிப் போடவே எழுந்தவர் சரளமாக கவியியற்றி மதுரமாக பாட ஆரம்பித்துவிட்டார். முதல் கன்னட பாடல் தனது குருவாக ஏற்றுக்கொண்ட புரந்தரதாசர் மீதே!

பாட்டை கேட்டவரெல்லாம் மயங்கிப் பின்தொடர நிறைய பேர் அவரை தங்கள் இல்லத்துக்கு அழைத்து பஜனை நிகழ்த்த வேண்டினர். வேண்டவே வேண்டாம் என்று சொல்லியும் நிறையப் பணத்தை அவரிடம் கொட்டினார்கள். அவர் யோசித்துவிட்டு பணத்தை எல்லாம் சேர்த்தார். தனது குரு புரந்தரதாசர் பெயரில் ஒரு மடத்தை காசியில் கட்டினார். அதில் விட்டலன் சிலையும் பிரதிஷ்டையானது. காசியிலிருந்து கர்நாடகாவிற்கு யாத்திரை தொடங்கினார். இந்த தக்ஷின யாத்திரையில் எண்ணற்ற பக்தர்கள் சேர்ந்தனர். ஒரு பல்லக்கில் அவரோடு விஜய விட்டலன் என்ற கண்ணன் சிலையும் உண்டே!

காசிக்கு செல்லும்போது பட்ட இன்னல்கள் என்ன? இப்போது காசியிலிருந்து கர்நாடகா திரும்பும்போது விட்டலன் அருளால் என்ன வசதிகள்! வருவோர் போவோர்க்கேல்லாம் உணவு, ஆடைகள் வழங்கினார். விஜயதாசர் தன்னுடைய ஊருக்கே இப்போது வந்து சேர்ந்தார். ஊர் மக்கள் அவரை மட்டற்ற மரியாதை சந்தோஷத்துடன் வரவேற்று உபசரித்தனர். அவர் யாரென்றே அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. யாரோ ஒரு மகான் என்றே இவ்வளவு மரியாதை! விஜயதாசரின் அப்பா வீட்டிலிருந்து வெளியே வந்து இந்த மாபெரும் பஜனை ஊர்வலத்தைப் பார்த்தார்.

யார் இவர்?” என்று கேட்டார் அங்கிருந்தோரை. "யாரோ பெரிய மகான். அவரை வரவேற்று ஆசீர்வாதம் பெறவேண்டும்" என்று அவர்கள் சென்றுவிட்டார்கள். தானும் அவ்வாறே செய்ய வந்த அவர் அப்பா, முதலில் வந்த விஜயவிட்டலனை வணங்கினார். பின்னால் ஆடிப் பாடி பரவசமாக வந்த விஜயதாசர் தனது தந்தையைப் பார்த்து விட்டு ஓடிவந்து அவர் கால்களில் விழுந்து வணங்கினார். பஜனை கோஷ்டியை சேர்ந்த அனைவரும் விஜயதாசரின் தந்தை காலடியில் விழுந்து வணங்கினர்.

பக்த ஸ்ரேஷ்டர்களே! இனி நான் இங்கேயே தங்கப்போகிறேன் என்று விஜயதாசர் சொன்னதும் பக்தர்கள் அங்கேயே விஜய விட்டலனை ஸ்தாபித்து ஒரு ஆஸ்ரமம் கட்டி அவரது அன்றாட நாமசங்கீர்த்தனம் தொடர வழி செய்தனர்

நாமும் அவரை அங்கேயே மனநிறைவோடு விட்டலனை வழிபட விட்டுவிட்டு அடுத்த கதைக்கு செல்ல வேண்டியிருக்கிறதே!


                                                                      The writer can be reached at: jksivan@gmail.com

 

No comments:

Post a Comment