Translate

Tuesday 19 February 2013

விட்டலன் கதை 22

வயிற்றுவலி
by J.K. Sivan

விஜயதாசரை பற்றி எத்தனையோ கதைகள் சொல்லலாம். இருந்தபோதிலும் எந்த கதைகளில் ஒரு பாத்திரமாக விட்டலன் வருகிறானோ அக்கதைகளை மட்டுமே உங்களுக்கு சொல்லி வருகிறேன் அல்லவா.? இன்று ஒரு சுவாரசியமான கதை உங்களுக்கு காத்திருக்கிறதே!!

ஸ்ரீனிவாச ராவ் என்று ஒரு சமஸ்க்ரித பண்டிதர் அந்தஊரில் வசித்து வந்தார். அவர் உபன்யாசங்கள் செய்வார் ஆனால் அவற்றை கேட்க அவருக்கு ரொம்ப தெரிந்த, அவரது விருப்பத்தை தட்டமுடியாத அவர் நண்பர்கள் மட்டுமே வேறு வழி இன்றி வந்தனர் என்று சொல்லலாம்.

"நான் இருக்கும் இதே ஊரில் உள்ள விஜயதாசர் என்கிறவர் செய்யும் பஜனைக்கு மட்டும் ஜனங்கள் ஜேஜே என்று போகிறார்களே இங்கு ஒரு பயல் வரமாட்டேன் என்கிறானே" என்று ராவுக்கு ரொம்ப பொறாமை, கோபமும் கூட. "அந்த மனுஷனுக்கு என்ன படிப்பிருக்கு, வேதம் தெரியுமா மந்திரம் தெரியுமா, சம்ஸ்க்ரிதம் என்னவென்றே தெரியாதவர் பஜனை என்ற பெயரில் ஏதேதோ உளறினால் அதை போய் கேட்கிறார்களே. அவருக்கு என்னளவு ஞானம் உண்டா?" பலரிடம் ராவ் இவ்வாறு அங்கலாய்த்தது விஜயதாசர் காதில் விழுந்தாலும், "விட்டலா! என் மனத்தை பிழிந்து உன்மேல் உள்ள அப்பழுக்கற்ற பக்தியில் கலந்து நான் அர்ப்பணிக்க எனக்கு சம்ஸ்க்ரிதம் தெரியவில்லையே அப்பா!, என்னை மன்னித்துவிடு. என்னுடைய கன்னடத்தில் தவறிருந்தால் என்னை மன்னித்துவிடு" என்று கெஞ்சினார்.

இப்படியே கொஞ்சநாள் சென்றது. திடீரென்று ராவுக்கு தாங்கமுடியாத வயிற்றுவலி வந்தது. எந்த நாட்டு மருந்தும், பத்தியமும், வைத்தியமும், குணப்படுத்தவில்லை. யாரோ, நீங்கள் உடனே திருப்பதி சென்று ஸ்ரீனிவாச பெருமாளை வேண்டிகொண்டால் வயிற்று வலி குணமாகலாம்." என்றதன் பேரில் திருப்பதி சென்று தினமும் புஷ்கரணியில் ஸ்நானம் செய்து ஒரு மண்டலம் தினமும் வெங்கடேசனை தரிசித்து வேண்டிக்கொண்டார். அன்றிரவே அவர் கனவில் வெங்கடேசன் தோன்றி "உங்கள் வயிற்று புண்ணை எவ்வளவு முயற்சித்தும் குணப்படுத்த இயலாததன் காரணம் விட்டலபக்தன் விஜயதாசரின் மனத்தை நீங்கள் புண் படுத்தியதாலேயே. இதற்கு ஒரே மருந்து நீங்கள் அவர் பாத தீர்த்தம் தான்" என வெங்கடேசன் அறிவுரை கேட்டு அம்புபோல் ஊர் திரும்பினார் ராவ்.

வந்ததும் வராததுமாக விஜயதாசரை அணுகி அவர் காலடியில் விழுந்து கதறினார். "என் அகம்பாவம், செருக்கு உண்மையான ஒரு பக்தனான உங்களை அவமதித்தது. அதன் பயனை, பலனை, அனுபவித்துவிட்டேன். என்னை க்ஷமித்து சிஷ்யனாக ஏற்று அருளவேண்டும்"

"அபசாரம், நீங்கள் பெரியவர், படித்தவர், சாஸ்திர ஞானம் கொண்டவர் இவ்வாறெல்லாம் பேசக்கூடாது" எவ்வளவோ தடுத்தும், வெங்கடேசன் கனவில் தோன்றி சொன்னதை மதித்து தனது பாத தீர்த்தம் பெற அனுமதித்தார் விஜயதாசர்.

விட்டலா, இது என்ன சோதனை என்று விஜயதாசர் ராவை தூக்கி அணைத்தபோது வயிற்றுவலி காணாமல் போனது. விஜயதாசரின் நிழலாக தொடர்ந்தார் ராவ். ஒருநாள் எனக்கு விட்டலின் தரிசனம் வேண்டுமே என்று கேட்டபோது விஜயதாசர் அவரிடம் "நீங்கள் பண்டரிபுரம் செல்லுங்கள். விட்டலன் அருள் புரிவான் என்றார். பண்டரிபுரம் சென்ற ராவ் ஒருநாள், சந்திரபாகா நதியில் ஸ்நானம் செய்தபோது தலையில் "ணங்" என்று எது இடித்தது என்று பார்த்தால் "விட்டலனின் அழகிய ஒரு சிலை". அதை எடுத்துகொண்டு தன் குருநாதர் விஜயதாசரிடம் ஓடினார்.

"பார்த்தீர்களா, விட்டலனின் கருணையை. அவன் ஜகந்நாத விட்டலன். ஸ்ரீனிவாச ராவ் ஆகிய நீங்களும் இன்று முதல் அவன் அருளால் ஜகந்நாத தாசர்"

நிறைய விஜயதாசர் ஜகந்நாத தாசர் ஸ்லோகங்கள் விட்டலன் மேல் இனிமையாக இருப்பதை, விட்டல் பஜனைகளை கேட்கும்போது சுகமாக அனுபவிக்கலாம்.



The writer can be reached at: jksivan@gmail.com

 

2 comments:

  1. From: prabhu purushothaman [mailto:prabhungl@yahoo.co.in]
    Sent: Wednesday, February 20, 2013 5:50 PM
    To: jksivan
    Subject: Re: Amritha Vahini - FW: MORAL STORY PAANDURANGAN 5

    One page a day Baktha Vijayam is very fascinating.

    ReplyDelete
    Replies
    1. It was very kind of you, Sir, to appreciate the daily Vittal Story. Many Krishna devotees from different parts of the world are reading Shri. J.K. Sivan's daily stories. Your appreciative comments further encourage us to do still more for propagating the eternal glories of Krishna.

      With kind regards.
      Ram

      Delete