Translate

Thursday 10 January 2013

ஆண்டாளும் தோழியரும் (12)
by J.K. Sivan
 

நேற்று நாம் என்ன பேசினோம்? ஆண்டாள் தனது தோழியரோடு கிருஷ்ண பரமாத்மாவை பார்த்த போது கண்ணன் எவ்வளவு ஆபத்துகளை பிறந்ததிலிருந்தே எதிர்கொண்டவன்; வடமதுரையில் பிறந்து கோகுலத்தில் ரகசியமாகவே வளர்ந்ததை எல்லாம் நினைவு கூர்ந்துவிட்டு அந்த கண்ணன் கழல்களே சரணம் என வணங்கி ஆசிவேண்டினதை எல்லாம் பற்றியல்லவா?. இன்று மார்கழி 26ல் நடந்தவை என்ன என்று பார்க்கலாமா? விட்ட இடத்திலிருந்து தொடர்கிறாள் ஆண்டாள்.
கிருஷ்ணா, எங்களிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டாயே. இதோ லிஸ்ட் தரேன்” என்று ஒன்றன் பின் ஒன்றாக எதை கேட்டாள்? மார்கழி யமுனை நீராட எங்களுக்கெல்லாம் நிறைய சங்கு வேண்டும். எப்படிப்பட்ட சங்கு தெரியுமா” வெள்ளை வெளேரென்று உன்னுடைய பாஞ்சஜன்யம் இருக்கு பாரு! அதே மாதிரி தான். எங்கள் நோன்பு பாடல்களை நாங்கள் பாடிக் கொண்டு வீதி வலம் வரும்போது எல்லோருக்கும் கேட்கும்படியான சத்தம் கொடுக்கும் பெரிய பேரிகைகள் வேண்டும். திருமாலின் அவதாரமான கிருஷ்ணா! உன் புகழ் பாடி உனக்கு பல்லாண்டு பாட எங்களுக்கு நிறைய வேதகோஷ பாடகர்கள் தேவை. வரிசை வரிசையாக ஏற்றி வைத்து உன்னை தீபாலங்காரத்தோடு வழிபட நிறைய விளக்குகள் வேண்டும். எங்கும் உன் புகழ் பாடி நாங்கள் வரும்போது அனைவரும் கண்டு களிக்க வண்ண வண்ண துணிகளில் நிறைய கொடிகள் வேண்டுமே. அங்கங்கு பந்தல் போட்டு உன் பிரசாதங்களை அனைவருக்கும் இட்டளிக்க பந்தல் துணிகள் வேண்டும். என்ன வெள்ளம் போல் எதையெல்லாமோ கேட்கிறாளே இந்த ஆண்டாள் என்று யோசிக்கிறாயா? அதற்கும் காரணம் ஒன்று இருக்கிறதே! பிரளயம் என்ற கால ஊழியில் எதுவுமே நீரில் மூழ்கியபோது நீ மட்டும் ஒரு ஆலிலையில் சுகமாக படுத்து பிரயாணம் செய்து உலகை மீட்டு கொடுத்தவனாச்சே உனக்கு என் லிஸ்ட் ஒரு வெள்ளமா? ஒரு பொருட்டா? நீ இவற்றை அளித்தால் தானே எங்கள் நோன்பு விரதம் எல்லாம் சிறக்கும். புரிகிறதா?" என்றாள் ஆண்டாள்.
ஒருவிஷயம் இங்கு சொல்லவேண்டும் பெரிய மேதாவிகள், ஞானிகள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்? ஆண்டாள் கேட்ட பொருள்கள் எதை குறிக்கிறதாம் தெரியுமா?.
சங்கு: மந்த்ராசனம். பேரிகைகள்: ஸ்னானாசனம் (திருமஞ்சனம்) வேதகோஷம் பல்லாண்டு : அலங்காராசனம்.: விளக்கு: நைவேத்ய சமர்ப்பணம். கொடி: விஞ்ஞாபனம், பந்தல்: பர்யங்காசனம்.

ஆண்டாள் கேட்ட 6 அயிட்டங்களும் பகவத் ஆராதனத்தில் உபசார ஆசனங்கள். ஆண்டாள் பார்ப்பதற்கு ஒரு குக்கிராம சிறுமி போல் காட்சியளித்தாலும் ரொம்ப விஷயம் தெரிந்தவள் என்று புரியவில்லையா? . இன்று மார்கழி 26ம் நாள் இந்த ஆண்டாளை நாம் முத்தங்கி சேவையில் பார்க்கலாம் ஸ்ரீ வில்லிபுத்தூரில், அவள் தங்க சேஷ வாகனத்தில் பவனி வரும்போது.

 

                                                      The writer can be reached at: jksivan@gmail.com

No comments:

Post a Comment