Translate

Wednesday 2 January 2013

ஆண்டாளும் தோழியரும் (2)
by J.K. Sivan
என் ஆசைத் தோழியரே, இன்று மார்கழி மாசம் பிறந்து 6வது நாளல்லவா?
“என்னடி நீங்க ரெண்டேபேர் மட்டும், நிறைய பேரைக் காணோம்? வாங்க, நாம போய் அவங்களை எல்லாம் எழுப்பிக் கூட்டி வருவோம். ஒவ்வொரு கதவா தட்டுவோம். “என்னடி இன்னும் தூக்கம்? எழுந்திருங்கோ. பெருமாள் கோவில் சங்கு ஊதறது கூடக் கேக்கலையா? குழந்தையா இருந்தபோது விஷப்பால் ஊட்ட முயன்றவளைக் கொன்றவன், சகடாசுரன், காளிங்கனை எல்லாம் அழித்தவன், ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டவன், அப்படிப் பட்டவனை ரிஷிகள் எல்லாம் ஹரி ஹரி என்று ஸ்மரிக்கிரார்களே!” அது கூடவா காதிலே விழலை. நாங்க கதவைத் தட்டுற தட்டிலேஅவனே எழுந்து விடுவான் போலிருக்கிறதே? சீக்கிரம் எழுந்து வந்தாதான் நாம் குளிச்சு நம்ப நோன்பை ஆரம்பிக்க முடியும்.

"ஆண்டாள், ரொம்ப ஆவலா இருக்குடி, நீ இன்னிக்கி என்ன சொல்லித்தரப் போறே?"
இன்று நான் உங்களுக்கு என்ன சொல்லட்டும்? எல்லோரும் யமுனையில் நீராடி விரதமிருக்கிறோமே, இருக்கிறவா அதை முதலில் முடிப்போம். மீதியை அவர்களும் வரட்டும் நாளைக்குச் சொல்கிறேன்.”
அதுக்குள்ள, இன்னியோடு மார்கழி 7 நாள் ஆயிட்டுதே!! இன்னிக்கும் நாம போய்க் கதவை தட்டினால் தான் எழுந்திருப்பாளோ !."ஏய் எழுந்து வாங்கோடி சீக்கிரம். மரத்திலே எல்லா பட்சிகளின் கானம்,வண்டுகளின் கீச் கீச் சத்தம், எல்லா வீட்லேயும் கை வளை குலுங்க சர் சர் னு கயிற்றை மத்துல கட்டி தயிர் கடையற சத்தமோ எதுவுமே உங்கள் காதிலே விழவில்லையா? வாங்கடி அழகிகளா, வழக்கம் போல நாராயணன் பெருமை பாடுவோம், எழுந்திருங்கோ, கதவைத் திறங்கோ சீக்கிரம் “

இன்றும், மார்கழி 8ம் நாள், ஆண்டாள் மற்ற சில பெண்களை துயிலெழுப்பி கூட்டிச் சென்று பாவை நோன்பை வழக்கம் போல் தொடர்ந்தாள்
இப்ப இதுவே வழக்கமாயிட்டுது. நாம வந்து கதவைத் தட்டி எழுப்பினா தான் வரதுன்னு. வாங்க போய் எழுப்புவோம் அவர்களை எல்லாம். எழுந்திருங்கோ உள்ளேயிருக்கும் எருமைகளே! கிழக்கே வெளுத்துடுத்து. வெளிச்சம் வந்ததாலே வெளியிலே கறவை எருமை எல்லாம் கூட நிதானமா அசைந்து மேச்சலுக்கு வந்துடுத்து. சிலது காத்திருக்கு எங்களைப் போல! அந்த கிருஷ்ணனை, சாணுரனை வாய் பிளந்து கொன்றவனை, தேவாதி தேவனை எவ்வளவு போற்றினாலும் மேலும் மேலும் புகழ்ந்து பாட வைக்கிறவனை பூஜிப்போம் எழுந்து வாங்கோ.!!

“என் உற்ற சிநேகிதிகளா, நீங்களாவது என்னோடு தினமும் வந்து மற்றவர்களை எழுப்புவது மகிழ்ச்சியாய் இருக்கிறது. இன்றும் (மார்கழி 9 தேதி) வழக்கமான வேலை-அது தான்,கதவைத் தட்டி எழுப்புவது - நடக்கட்டும். அடியே! செவிடு, பதிலே சொல்லாம தூங்குகிற ஊமை, பைத்தியம், சுகமாக கொசு கடிக்காம அகில் புகை போட்டுண்டு வாசனையா, மெத்மெத்துன்னு கட்டில் மேலே கனவு கண்டு கொண்டே இருக்கிறவளே!, எழுந்து வாடி வெளியே, காத்திண்டிருக்கோம் உனக்காக. நாங்க மட்டுமில்லை அந்த கிருஷ்ணனான நாராயணனும் நம்ப நோன்பு பாட்டு எல்லாம் கேக்க ஆசையா காத்திண்டு இருக்கான், கேட்டு அருள்வதற்கும் தான்! . மாமி மாமி, கொஞ்சம் அவளை எழுப்பறேளா?
மார்கழி பத்து. இன்றும் விடப் போவதில்லை, வழக்கம் போல் கதவைப் பிளப்போம். போன ஜன்ம புண்யத்தாலே நாம பாவை நோன்பிலே புகழ்ந்து பாடும் கிருஷ்ணனாக வந்த நாராயணன் ராமனாக வந்து நல்ல வேலை செய்தான். கும்பகர்ணனைக் கொன்றதோடு இல்லாமல் அவனுடைய மீளா தூக்கத்தை உன்கிட்ட கொடுக்க வைத்தான் பார்!!. துளசி கமகமக்க மாலையை போட்டுண்டு, நாம் பாடும் அவன் நாமங்களை நம் வாயாலே கேக்கக் காத்திண்டிருக்கான்! சீக்கிரம் எழுந்து ஓடி வந்து கதவைத் திற. நின்னு நின்னு 11ம் நாள் வந்துடும் போல இருக்கு!!. இன்னிக்கு உண்டான பாவை நோன்பை சீக்கிரம் முடிப்போம்.

(நாளை மார்கழி11 அந்த பெண்களோடு சேர்ந்து கதவைத் தட்டி எழுப்புகிறேன்)

 
The writer can be reached at: jksivan@gmail.com

No comments:

Post a Comment