Translate

Friday 11 January 2013

ஆண்டாளும் தோழியரும் (13)
by J.K. Sivan
 


மாதங்களிலே சிறந்த மார்கழி அந்த மாதவனின் ஸ்வரூபமே. அவனே சொல்லியிருக்கிறானே மாதங்களில் நான் மார்கழி என்று. இந்த 26 நாட்களும் ஆண்டாள் போற்றும் கிருஷ்ணனின் தனி சிறப்பு என்ன? ஒருவர் மற்றொருவரிடம் விரோதம் கொண்டாலோ அவரை வென்று விட்டாலோ தோற்றவர் மற்றவரிடம் சொல்லவொண்ணா கோபமும் ஆத்திரமும் கடைசிவரை வைத்திருந்து எப்போது அவரை வீழ்த்தலாம் என்று சந்தர்ப்பம் எதிர் நோக்கி இருப்பது நாம் அறிந்த உண்மை. கிருஷ்ணனிடம் தோற்றவர்களோ அவனை எதிர்த்தவர்களோ கடைசியில் அவன் உண்மை ஸ்வரூபம், குணம், உத்தம பண்பு,பரோபகாரம் எல்லாம் உணர்ந்து அவனிடம் சரணாகதி அடைந்து அவனால் நற்கதி அடைவர். ஆண்டாள் கண்ணனின் இந்த பெருமையை பறை சாற்றுகிறாள். கண்ணா!
"உன் புகழ் பாடி நோன்பு நோற்று அது நிறைவேறும் நிலையில் உன்னிடம் வேண்டுவன எல்லாம் கேட்டு பெற்று நோன்பின் பயன் அடைந்தோமே. இந்த சிறுமிகளுக்கு நீ தக்க சன்மானம் தரவேண்டுமல்லவா முதலில் இந்த ஆயர்குல சிறுமிகள். நோன்பு முடியும் இந்த நேரத்தில் நல்ல புத்தாடைகள் உடுத்து, கை கால் கழுத்து நிறைய நகைகள் அணிந்து, மலர்கள் சூட்டிக்கொண்டு இனிப்பான கமகம வென மணக்கும் நெய் பால், சர்க்கரை கலந்து உனக்கு நைவேத்யம் செய்த அக்கார வடிசல் கைநிறைய எடுத்து முழங்கை வழியாக நெய் வழிய வழிய உண்ண எங்களோடு வா கண்ணா, வா எங்களுடன் நீயும் மகிழ்ச்சியோடு உண்ண வாயேன்!"
 ஆண்டாளின் இந்த 27 வது பாசுரம் மிக அருமையான ஒன்று. அவள் சொல்லும் நெய் பால் சர்க்கரை பொங்கலை போன்று இனிக்க வல்லது என்பதில் ஏதேனும் ஐயம் உண்டோ? இன்று 11/1/2013 ஸ்ரீ வில்லி புத்தூரில் ஸ்ரீ ஆண்டாள்-சுந்தரராஜன் திருக்கோலம் எத்தனையோ பக்தர்கள் கண்டு மகிழ இன்றிரவு வீதிவலம் எதில் தெரியுமா....தங்க ஹம்ச வாகனத்தில்!!
The writer can be reached at: jksivan@gmail.com

 

No comments:

Post a Comment