Translate

Sunday 6 January 2013

ஆண்டாளும் தோழியரும் (8)
by J.K. Sivan
 

இந்த உலகில் உண்மையாக பாடுபட்டு உழைத்தால் கைமேல் பலன் என்று நாம் கூறுகிறோம் அல்லவா? அந்த காலத்திலேயே ஆண்டாள் என்கிற சிறு பெண் இதை நிரூபித்திருக்கிறாள். தினமும் முழுமனதோடு இறைவன் மீது தீராத அன்பும் பக்தியும் கொண்டு தன்னொத்த சிறுமிகளையும் விடியற்காலையிலேயே கூட்டிக்கொண்டு யமுனைநதியில் நீராடி மார்கழி குளிரில் நாவினிக்க மனமினிக்க நாராயணனை, பரந்தாமனாகிய கிருஷ்ணனை வேண்டி அருள் பெற விரதமிருந்தாள். இதோ இன்று மார்கழி 22ம் நாள் நந்தகோபன் அரண்மனையில் கிருஷ்ணனின் அறையில், நப்பின்னையின் பூரண ஆசியோடும் உதவியோடும் கிருஷ்ணனையே நேரில் கண்டு தோழியரோடு நிற்கிறாள்.
கிருஷ்ணனை அவன் அறையிலேயே பிடித்த கின்னஸ் ரெகார்ட்பெண்ணல்லவோ ஆண்டாள்! அவள் என்ன சொல்லி பாடுகிறாள் இனிய குரலில் கிருஷ்ணனை நோக்கி, என பார்ப்போமா:

“கிருஷ்ணா, இதோ உன் அறையில் எண்ணற்ற மாவீரர்களும் அரசர்களும் உன்னோடு மோதி தோற்று, உன் அருமை பெருமை அறிந்து தம் தவறை உணர்ந்து கைகட்டி வாய் பொத்தி, தலை குனிந்து பணிவோடு உன் அடிமையாக நின்றிருப்பதை நாங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறோமே. அதே போல் நாங்களும் உன் கட்டிலின் அருகே செயலிழந்து சரணாகதி என நிற்கிறோமே. பாரேன்! உன்னுடைய சூர்ய சந்திரர்கள் போன்ற செந்தாமரைக்கண் சற்றே திறந்து கொஞ்சம் கொஞ்சமாகமாவாவது எங்கள் மேல் பட்டாலே எங்கள் ஜன்ம ஜன்மாந்தர பாபங்கள் எல்லாம் தீருமே!! எங்கள் பாவை நோன்பின் பலன் கைமேல் கிட்டட்டுமே". -- என்ன ஆழ்ந்த பக்தி அந்த பெண்ணுக்கு பார்த்தீர்களா? அவள் பெற்ற அந்த அருள் கொஞ்சம் கொஞ்சமாவது சிந்தி நம் மேல் விழட்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.

இன்று நாம் இதை படித்துக்கொண்டு இருக்கும் மார்கழி 22ம் நாள் ஸ்ரீ வில்லிபுத்தூரில் என்ன விசேஷம் தெரியுமா ஸ்ரீ ஆண்டாள் பிரியா விடை காட்சி!!! அங்கிருக்கும் பக்தர்களுக்கும் எங்கிருந்தோ அங்கு சென்று களிக்கும் பக்தர்களுக்கும் இங்கிருந்தே அதையெல்லாம் நினைத்து பார்க்கும் நமக்கும் அந்த நாராயணனின் அருள் கிடைக்க வேண்டி குட்டிகதையின் இன்றைய பாசுர பகுதி இடைவேளை பெறுகிறது.

 
                                                        The writer can be reached at: jksivan@gmail.com

No comments:

Post a Comment