Translate

Tuesday 11 December 2012

பீஷ்மர் தந்த பரிசு
by J.K. Sivan  
பத்து நாள் யுத்தம் முடியும் தருவாயில் பேரிடி காத்திருந்தது கௌரவ சைன்யத்துக்கு. பிதாமகர் பீஷ்மர் பாண்டவர்களை வறுவலாக்க, ஒன்பது நாளாக, எப்படியோ தாக்குப் பிடித்தனர் பாண்டவர்கள். கிருஷ்ணன் தான் காரணம் இதற்கு.
அர்ஜுனா, உன் வீரம் பீஷ்மர் முன் செல்லாது. வீணாகப் பிரயாசைப் படாதே. நான் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறேன். தர்மனை வரச்சொல் உடனே” என்றார் கிருஷ்ணன். ஓடி வந்தான் தர்மன்


“தர்மா பீஷ்மனை பூமியில் எவராலும் வெல்ல முடியாது. எனக்கு தெரிந்து ஒரு வழி தான் உண்டு. பீஷ்மன் பெண்களை எதிர்த்தோ அல்லது ஆணல்லாதவருக்கு எதிராகவோ ஆயுதம் எடுக்க மாட்டார். அம்பை என்ற பெண் பீஷ்மனை கொல்லவென்றே தவமிருந்து ஆணாக மாறியவள். அவள் இந்தப் போரில் உனக்கு உதவ வந்திருக்கிறாள். அவள் பீஷ்மரைப் பழி வாங்கவென்றே நீலத் தாமரை மாலை சூடிக்கொண்டவள். ஆணாக மாறி சிகண்டி என்று பெயர் மாற்றம் செய்து கொண்டிருக்கிறாள்” என்றார் கிருஷ்ணன். “உடனே சிகண்டியை வரவழை. என் மீது பீஷ்மனின் பாணங்கள் முழுதும் என்னைச் சல்லடை கண்ணாக்கி விட்டன. அவ்வளவும் அர்ஜுனனை நோக்கி வந்தவை. ஒரு கணம் நானே பீஷ்மரைக் கொன்றுவிட தேரிலிருந்து இறங்கி விட்டேன். பிறகு அமைதியானேன். என்னை ஆயுதம் எடுக்க வைக்கிறேன் என்று பீஷ்மர் சபதமிட்டது நினைவு வந்தது. பொறுத்துக் கொண்டேன். நாளை சிகண்டியை உனக்குக் கவசமாக முன்னிறுத்திக் கொள் எனக்கு இனி பீஷ்மனின் சித்ரவதை தாங்க முடியாது” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் கிருஷ்ணன்.
பத்தாம் நாள் யுத்தம் துவங்கும்போது பீஷ்மர் ஆக்ரோஷத்தோடு வந்தார். இன்றே கடைசிநாள், அர்ஜுனனையும் பாண்டவர்களையும் வென்று யுத்தம் இன்று முடியும் என்று முடிவெடுத்தார்.
அர்ஜுனன் முன்னால் சிகண்டி நீலத் தாமரை மாலையுடன் போரிட வந்ததை எண்ணிச் சிந்தித்தார். இது நிச்சயம் கண்ணனின் திட்டம் எனச் சட்டென்று புரிந்து கொண்டார். சிகண்டி சரமாரியாக பொழிந்த அம்புகளை ஏற்றுக்கொண்டார். திருப்பித் தாக்க முயலவில்லை. அவர் சிகண்டியின் சரங்களை தாக்காமல் இருந்த நேரத்தில், அர்ஜுனனின் தாக்குதல்கள் அவரைத் துன்புறுத்தின. கடைசியில் வேறு வழியின்றி பீஷ்மர் குற்றுயிரும் குலையுயிருமாய் யுத்த களத்தில் சாய்ந்தார்.
பெரிய ஆபத்திலிருந்து பாண்டவரை கண்ணன் இவ்வாறு மீட்டார்.
“யுதிஷ்டிரா பீஷ்மர் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார். உடனே செல். அவருக்குப் பணிவிடை செய்” என்றார் கிருஷ்ணன்.
“அர்ஜுனா, ஒரு தாத்தாவுக்கு பேரனிடம் யுத்தம் செய்து தோற்பதில் என்ன ஆனந்தம் இருக்கும் என்று புரியும் வயதில்லை உனக்கு. இங்கே வா. எனக்கு மரணம் அடுத்த அயனத்தில் தான். 43 நாள் காத்திருக்க வேண்டும் நான். அதுவரை எனக்கு ஒரு நல்ல அம்புப் படுக்கை விரித்துக் கொடு” என்றார் பீஷ்மர். அவ்வாறே செய்தான் அர்ஜுனன்.
யுதிஷ்டிரா இங்கே வா. உனக்கு நாராயணனின் ஆயிர நாமங்களைச் சொல்கிறேன் என்றார். இதையே வியாசர் நமக்கு விஷ்ணு சஹஸ்ரநாமமாய்த் தந்திருக்கிறார்

ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்!

 
                                                   
                                              
The writer can be reached at: jksivan@gmail.com

No comments:

Post a Comment