Translate

Sunday 23 December 2012

பரிசு
by J.K. Sivan


வசந்த காலம் வந்துவிட்டது. மரங்களும் கொடிகளும் செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. யமுனையில் கரை புரண்டு ஓடுகிறது குளுமையான நீர். ஆயர்பாடி சிறுவரும் சிறுமியரும் தென்றல் காற்றில் மிதந்துவரும் மலர்களின் நறுமணத்தை சுவாசித்துக்கொண்டு அன்று மாலை வெயிலின் மென் சுகத்தில் நீரில் நேரம் போவது தெரியாமல் சுகமாக விளையாடுகின்றனர்.
கிருஷ்ணன் புல்லாங்குழலிலிருந்து இன்னிசை வெள்ளம் வேறு இந்த சூழ்நிலையில் கலந்துள்ளது. மழை வரலாம் என்று அறிவிக்க கார்முகில் கூட்டம் மெல்ல மெல்லக் கவிந்து வர, அந்த பிரதேசத்தில் உள்ள மயில்களுக்குக் கொண்டாட்டம். இந்த சூழ்நிலையில் தானாகவே தோகை விரித்தாடும் அவற்றுக்கு கண்ணனின் குழலோசையின் பதங்கள் சற்று அதிக சந்தோஷத்துடனேயே ஆட வைத்தது.
"என்னமாக வாசிக்கிறான் இந்த கிருஷ்ணன் பார்த்தாயா?" என்றது மயில் கூட்டத்தின் தலைவன் தன் ராணியிடம்.
"நீ எப்போதும் தப்பாகவே தான் எதையும் செய்வாய், சொல்வாய்" என்றது ராணி.
" நான் என்ன தப்பாக சொல்லி விட்டேன்" என்று ஆட்டத்தை நிறுத்திக் கேட்டது தலைவன் மயில்.
" பின்னே என்ன, கிருஷ்ணன் குழல் ஓசையை பார்த்தாயா, என்கிறாயே, கேட்டாயா என்று தானே சொல்லணும்?”
“கிருஷ்ணனைப் பார்த்தால் எல்லாம் மறந்து விடும் அப்பறம் எப்படிக் கேட்பது?" என்று ராணி மயில் சொல்லவே "ஆமாம் நீ எப்பவும் எதிலும் சரியே" என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தது தலைவன் மயில்.
"இவ்வளவு அழகாக இன்னிசை பொழிந்த கண்ணனுக்கு நாம் என்ன பரிசு கொடுப்பது?" என்று கேட்டது தலைவன். எதாவது தப்பாக சொல்லி மாட்டிகொள்வதை விட ராணியையே யோசிக்க வைக்கலாமே என்று.
"நீ தான் நம் கூட்டத்திலேயே அழகன், உன்னிடம் என்ன அழகான பொருளோ, அதையே அவனுக்குக் கொடேன்"
யோசித்துப் பார்த்து தலைவன் மயில் நடமாடிக்கொண்டே கிருஷ்ணனை அணுகியது. அவன் மடியில் தன் தலையை வைத்துக் கொண்டது. குழலை வாயிலிருந்து எடுத்து விட்டு கிருஷ்ணன் கேட்டான்.
"அழகிய மயிலே எதற்கு என்னிடம் வந்தாய்.சொல்."
"கிருஷ்ணா, எங்களை பரவசப்படுத்திய நீ எல்லோரையும் பரவசப்படுத்த உனக்கு நாங்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு பரிசு தருகிறோம் எற்றுக்கொள்வாயா?”
“மிக சந்தோஷமாகப் பெற்றுக்கொள்கிறேன் "
" இந்தா" என்று அந்த அழகு ஆண் மயில் தன்னிடத்தில் இருந்த ஒரு அழகிய இறகை கண்ணனுக்குப் பரிசாகக் கொடுத்து "இதை எப்போதும் உன்னிடம் வைத்துக் கொள்வாயா?" என்றது.
" அப்படியே அழகு மயிலே, இந்த இறகு என்றும் என் தலையில் செருகப்பட்டு இருக்கும் திருப்தியா?" என்றான் கிருஷ்ணன்.

மனமுவந்து கொடுத்த எதுவுமே மதிப்பிட முடியாதது!



                                          The writer can be reached at: jksivan@gmail.com 

No comments:

Post a Comment